எந்த நாடும் அதன் சமூக, பொருளாதார பின்விளைவுகளில் இருந்து தப்ப முடியாது என ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரஸ் (António Guterres) எச்சரித்துள்ளார்.
ஜெர்மன் தலைநகர் பெர்லினில், பணக்கார மற்றும் வளரும் நாடுகளை சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்ற கூட்டம் நடந்தது. அதில், ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரஸ் (António Guterres) பேசுகையில்,
பருவநிலை மாற்றம், கொரோனா ஆகியவை முன்எப்போதும் இல்லாத அளவுக்கு பட்டினி பிரச்சினையை உருவாக்கின. அதனால் கோடிக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். உக்ரைன் போர், அந்த நிலைமையை மேலும் மோசமடைய செய்துள்ளது. ஆசிய, ஆப்பிரிக்க, அமெரிக்க நாடுகளில் உரம், எரிசக்தி விலை உயர்வை சமாளிக்க முடியாமல் விவசாயிகள் திண்டாடுகிறார்கள்.
அந்த நாடுகளில் அறுவடை பாதிக்கப்படும். அதனால், இந்த ஆண்டு பல நாடுகளில் பஞ்சம் அறிவிக்கப்படும் அபாயம் உள்ளது. அடுத்த ஆண்டு நிலைமை இன்னும் மோசமடையும்.
உணவு கிடைக்காத பிரச்சினை, உலக அளவில் உணவு தட்டுப்பாடாக மாறும். அது உலக அளவில் பேரழிவை ஏற்படுத்தும். எந்த நாடும் அதன் சமூக, பொருளாதார பின்விளைவுகளில் இருந்து தப்ப முடியாது.
எனவே, இதை சமாளிக்க ஐ.நா. அதிகாரிகள் ஒரு சமாதான நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார்கள் எனவும் அவர் கூறினார். அதன்படி, உக்ரைன் நாடு, உணவு பொருட்களை ஏற்றுமதி செய்ய முடியும்.
ரஷியா எந்த கட்டுப்பாடும் இன்றி உணவு, உரம் ஆகியவற்றை உலக சந்தைக்கு கொண்டுவர முடியும் என தெரிவித்த அவர், ஏழை நாடுகள் மீண்டுவர கடன் நிவாரணம் அளிக்கலாம் என்றும், உலக உணவு சந்தையை ஸ்திரப்படுத்த தனியார்துறை உதவ வேண்டும் எனவும் இதன்போது அவர் கோரிக்கை விடுத்தார்.